என்னை துண்டு துண்டாக வெட்டிவிடுவதாக அஃப்தாப் மிரட்டுகிறார்.! 2020இல் ஷ்ரத்தா கொடுத்த பரபரப்பு புகார்.!

அஃப்தாப் பூனாவாலா தன்னை வெட்டிக்கொன்று விடுவேன் என மிரட்டியதாக 2020யிலேயே ஷ்ரத்தா வாக்கர் போலீசில் அளித்த புகார் கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன் அஃப்தாப் பூனாவாலா என்பவர் தன்னுடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை கொடூரமாக கொலை செய்து, 36 துண்டுகளாக வெட்டி மெஹ்ராலி பகுதியில் உள்ள தனது வீட்டில் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து பிறகு அப்புறப்படுத்தியுள்ளார். கடந்த மே மாதம் இந்த கொலை நடந்துள்ளது.

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியிருந்தது. இந்த சம்பவம் முன்பாக 2020யிலேயே தனக்கு ஆபத்து நேரப்போகிறது என்று ஷ்ரத்தா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. ஷ்ரத்தா, நவ-23, 2020 அன்று ஒரு புகாரை மகாராஷ்டிராவில் துலிஞ் போலீசில் தெரிவித்துள்ளார். அந்த புகார்கடிதம் தற்போது ஷ்ரத்தாவின் பக்கத்து வீட்டுக்காரர் வெளியிட்டுள்ளார்.

2020 இல் இந்த புகாரை ஷ்ரத்தா பக்கத்து வீட்டுக்காரர் உடன் சென்று அளித்ததாக அவர் தெரிவித்தார். மகாராஷ்டிரா போலீசும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, இதுவரை போலீசுக்கு புகார் அளிக்கும் தைரியம் தனக்கு இல்லையென்றும், தற்போது அஃப்தாப் தன்னை கொல்ல முயற்சி செய்த பின் இந்த புகார் அளிக்க வந்ததாக கூறியிருக்கிறார்.

அஃப்தாப் தன்னை அடித்து துன்புறுத்தி வருகிறார், மேலும் தன்னை துண்டு துண்டாக வெட்டிக் கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். என்னை அஃப்தாப் அடித்து துன்புறுத்தி வருவது அவர் பெற்றோருக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார். அஃப்தாபும் தானும் தற்போது வரை லிவ்-இன் உறவில் வாழ்ந்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக இருந்தோம் என்று கூறியுள்ளார், ஆனால் எனக்கு அவருடன் சேர்ந்து வாழும் விருப்பமில்லை.

அவர் என்னை எங்கு பார்த்தாலும் கொன்று விடுவதாக மிரட்டி வருகிறார் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Comment