இளைஞர்களை காப்பதற்கான பரப்புரையில் இறையன்பு ஈடுபட வேண்டும் – பாமக நிறுவனர்

ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் இறையன்பு எடுத்திருப்பது மிகவும் சரியான முடிவு. அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன் – பாமக நிறுவனர்.

மது, புகையிலை, போதைப் பொருட்களின் தீமைகளில் இருந்து இளைஞர்களை காப்பதற்கான பரப்புரையில் இறையன்பு ஈடுபட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள வெ.இறையன்பு அவர்கள், எந்த அரசு பதவியையும் ஏற்கப் போவதில்லை என்றும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

அவர் எடுத்திருப்பது மிகவும் சரியான முடிவு. அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டின் இளைஞர் சமுதாயம் மது, புகையிலை, போதைப் பொருட்கள் ஆகிய முப்பெரும் அரக்கர்களிடம் சிக்கி சீரழிந்து வருகிறது. முப்பெரும் தீமைகளிடமிருந்து இளைஞர்களைக் காக்க அரசியல் ரீதியாக பாட்டாளி மக்கள் கட்சி போராடிக் கொண்டிருக்கிறது.

எனவே, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நலனில் அக்கறைக் கொண்டிருக்கும் வெ.இறையன்பு அவர்கள், மது, புகையிலை, போதைப் பொருட்களின் தீமைகளில் இருந்து இளைஞர்களை காப்பதற்காக அவர் வழியில் பரப்புரை செய்ய வேண்டும், பாடுபட வேண்டும். அது அவரை வளர்த்தெடுத்த தமிழ்ச் சமூகத்திற்கு அவர் செய்யும் கைம்மாறாக அமையும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஓய்வு பெற்றார். புதிய 49வது தமிழ்நாடு தலைமைச் செயலாளர் பதவிக்கு சிவதாஸ் மீனா ஐஏஎஸ் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். தனது ஓய்வு குறித்து இறையன்பு பேசுகையில், ஓய்வுக்கு பின்னர் என்ன செய்யலாம் என்று இதுவரை சிந்திக்கவில்லை. முதலில் ஒரு மாதம் ஓய்வு எடுக்க போகிறேன். அதன் பின்னர் சமுதாயத்திற்காக செயல்பட உள்ளேன். மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட உள்ளேன் என தெரிவித்திருந்தார்.