நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை! எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா. இதுவரை அவர் 280 மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர்  முன்னாள் எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இந்நிலையில், நடிகை ஜெயப்பிரதா அண்ணாசாலையில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம், இ.எஸ்.ஐ. ( ESI ) பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த தொகையை தொழிலாளர் அரசு காப்பீடு கழகத்தில் ஜெயப்பிரதா செலுத்தவில்லை.

இதனையடுத்து, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், இது தொடர்பாக, சென்னை மாவட்டம்  எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. பின், நடிகை ஜெயப்பிரதா ராம்குமார், ராஜ்பாபு உள்ளிட்ட 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதன்பின், மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து, நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தொழிலாளர்களிடம் பெற்ற தொகையை செலுத்தி விடுவதாக ஜெயப்பிரதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இதற்கு, தொழிலாளர் அரசு காப்பீடு கழக வழக்கறிஞர் கவுசிக் எதிர்ப்பு தெரிவித்தார். இறுதியாக இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.