நில அபகரிப்பு வழக்கு.! அதிமுக எம்எல்ஏ மற்றும் பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை.? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! 

கோவை மாவட்டடம் விளாங்குறிச்சி பகுதியில் 299 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சுமார் 45 ஏக்கர் நிலத்திற்கு பட்டா கோரி  கோவிந்தசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு இந்த வழக்கை ரத்து செய்து, நிலத்தை மீட்க அரசுக்கு உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற  தீர்ப்பின்படி, நில சீர்திருத்த சட்டத்தின் கீழ் 45ஏக்கர் நிலத்தை தமிழக அரசு மீட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த அறிக்கையில், அரசு கையகப்படுத்திய நிலத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெயராமன் மற்றும் பாஜக மாவட்ட செயலாளர் பாலாஜி உத்தமராமசாமி ஆகியோர் அந்த நிலத்தில் கட்டடம்  எழுப்பி விற்பனை செய்து வந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் கூறுகையில், நில அபகரிப்பு தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் உரிய விசாரணை செய்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதனை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.