திமுக குறித்த கேள்வியும்… திருமாவளவன் பதிவிட்ட டிவிட்டர் கருத்தும்.!

சென்னை தலைமைச் செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் பேசிய அவர் ” வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு பிரச்னையில், யாரையும் காப்பாற்றும் முயற்சியில், அரசு ஈடுபடவில்லை. உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

ஆதிதிராவிடர்களுக்கு எதிராக செயல்பட வேண்டிய தேவை தி.மு.க. அரசுக்கு இல்லை” என பேசினார். இதனை கேட்ட அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் ” சார் தி.மு.க.காரர் மாதிரி பேசுறீங்களே….?  என கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த திருமாவளவன்  இது  அநாகரிகமானது நீங்கள் கற்பனையாக கேள்வி கேட்கக் கூடாது. அதை மற்றவர்களிடம் வைத்து கொள்ளுங்கள்” என காட்டத்துடன் பதில் அளித்து சென்றார்.

திருமாவளவன் டிவிட் 

அதனை தொடர்ந்து தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் ” வேங்கைவயல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அதன் தலைமை மீதான நம்பகத்_தனமையைச் சிதைக்க வேண்டுமென்பதே அந்த கேள்வியில் இழையோடும் உள்நோக்கமென புலப்படுகிறது.

பாதிக்கப்பட்டோரின் பக்கம் நின்று, கூட்டணி கணக்குகளை முன்னிறுத்தாமல்,
நேர்மைத் திறத்தோடு போராடிக் கொண்டிருக்கிற ஒரு இயக்கத்தை மற்றும் அதன் தலைமையை, ஒரு குதர்க்கமான கேள்வியின் மூலம் சிறுமைப்படுத்தும் நோக்கமே அதில் வெளிப்படுகிறது.

* திமுக – விசிக உறவில் விரிசலை ஏற்படுத்திட வேண்டுமென்பதோ; * விசிக’வின் தனித்துவத்தைக் கொச்சைப்படுத்துவதோ;

* விசிக’வின் தலைமையைப் பலவீனப்படுத்த வேண்டுமென்பதோ;

* விசிக, தலித் மக்களுக்கு எதிராகவுள்ளது என்கிற தோற்றத்தை உருவாக்க வேண்டுமென்பதோ;

* திமுக, தலித்துகளுக்கு எதிராக உள்ளது என்று தெரிந்தும் விசிக மற்றும் அதன் தலைமை, திமுகவுக்கு ஆதரவாக அதனைப் பாதுகாக்கவே முயலுகின்றன என்கிற ஒரு பொய்யான கருத்துருவாக்கத்தைச் செயவதோ; அந்தக் கேள்வியின் அற்பமான உள்ளீடாக இருக்கலாம். ஆனால், அந்தக் கேள்வி பாதிக்கப்ட்ட வேங்கைவயல் மக்களின் மீதான கரிசனம் இல்லை என்பது மட்டும்தான் இதில் உணர வேண்டிய உண்மை நிலையாகும்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் திருமாவளவன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்ததற்கு பதில் அளிக்கும் விதமாக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும், திருமாவளவன் இந்த டிவிட்டர் பதிவில் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment