முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்.! பாஜகவுக்கு எதிரான பல்வேறு தீர்மானங்கள்.!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள்.

இந்தாண்டுக்கான மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஜூலை 20ஆம் தேதி பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் துவங்குகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய விஷயங்களை கேள்விகளாக எழுப்புவது தொடர்பாக தமிழகத்தில் இருந்து பங்கேற்கும் திமுக எம்பிக்களுடன் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஆளுநரின் செயல்பாடுகள், விலைவாசி உயர்வு, அமலாக்கத்துறையின் சோதனைகள், மணிப்பூர் கலவரம் மற்றும் பொது சிவில் சட்டம் உள்ளிட்டவைகள் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்புவது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு கொண்டுவரவுள்ள டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்பிக்கள் கூட்டத்தில் பாஜகவுக்கு எதிரான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்க வேண்டும் என்கிற விவரங்கள், மேலும் இது குறித்த தீர்மானங்கள் வெளியாகி உள்ளன. அதில், விளம்பர மோகம், 15 லட்ச ரூபாய் வாக்குறுதி, 2 கோடி வேலை வாய்ப்புகள், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  • மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும்.
  • தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக செயல்படும் ஆளுநருக்கு எதிராக தீர்மானம்.
  • எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் காலம் தாழ்த்துவது.
  • தமிழை புறக்கணித்து சமஸ்கிருதம், இந்தியை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு.
  • பொது விநியோக திட்டத்தின் கீழ் கோதுமை, பருப்பு போன்ற பொருட்களுக்கு மானியம் குறைப்பு.
  • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதில்
    விளம்பரத்தில் மோகம். வங்கி கணக்கு ஒவ்வொன்றிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதற்கு பதில் ஒவ்வொரு குடும்பத்திலும் விதவிதமான வரி வசூல்.
  • மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வரிப் பங்களிப்பில் உரிய நிதி வழங்காமல் வஞ்சிப்பது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைப்புக்குப் பதில் இந்த மூன்றின் விலையையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்த்தியது.
  • ஆண்டிற்கு 2 கோடி வேலை வாய்ப்பு வழங்குவதற்கு பதில் திண்டாட்டத்தில் கொண்டு வந்து விட்டது.
  • உழவர்களுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை இயற்றியது எதிர்த்து போராடிய உழவர்களை அலட்சியம் செய்ததும், பின் அனைத்துத் தரப்பு எதிர்ப்பினை கண்டு பயந்து பின்வாங்கியது.
  • ஏழைகளுக்கு கடனளிக்க எந்த திட்டமும் இல்லை நம் இந்திய நிதி அமைச்சரிடம். ஆனால், பா.ஜ.க.வால் கார்பரேட் முதலாளிகளின் கண்ணசைவில் இயங்கும் கம்பெனிகளுக்கு கடன் தள்ளுபடிகள் – வரிச் சலுகைகள் வழங்குவது.
  • எல்.ஐ.சி முதல் ஏர்இண்டியா வரையிலான பொதுத்துறை நிறுவனங்களை தனியார் முதலாளிகளுக்கு விற்பதில் ஆர்வம் காட்டுவது.
  • கேஸ் சிலிண்டர் தொடங்கி மூக்குபொடி வரை ஜி.எஸ்.டி. போடுவது.
  • மணிப்பூர் மாநிலமே பற்றி எரிகிற போது உலகம் சுற்றி அறிவுரை கூறுவது.
  • “அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை பாதுகாப்பதற்குப் பதில்”, அதை தகர்த்தெறியும் அன்றாட நடவடிக்கையாக மேற்கொண்டு வருவது.
  • அமலாக்கத்துறை, சிபிஐ, ஒன்றிய விழிப்புணர்வு ஆணையம், தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம், வருமான வரித்துறை, நீதித்துறை என அனைத்தின் சுதந்திரத்தையும் பறித்து இந்தியாவின் அடித்தளத்திற்கே ஆபத்தை உருவாக்கி வருவது.
  • பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில்” “ஒரே” என்ற முழக்கத்துடன் அனைத்தையும் மாற்றி வருவது.
  • ஆளும் மாநிலங்களில் நிர்வாகத்தை முடக்குவது; மாநிலத்தின் நிர்வாகச் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்குப் பதில் உச்சநீதிமன்ற தீர்ப்பையே திருத்தும் வகையில் டெல்லியில் அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுவது.
  • உச்சகட்டமாக, இப்போது பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று தேர்தல் முழக்கத்தில் இறங்கியிருப்பது.
  • அனைத்திற்கும் மேலாக இந்தியாவின் குடியரசுத் தலைவரையே இந்திய நாடாளுமன்றத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு அழைக்காமல் புறக்கணித்தது.
  • தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில், தொழிலாளர் நலச் சட்டங்களை, நான்கு சட்டங்களாக ஒருங்கிணைத்து தொழிலாளர்களை வஞ்சிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.