திருச்செந்தூரில் குழந்தையை கடத்திய பெண் கைதி திடீரென உயிரிழப்பு..! நீதிபதி விசாரணை..!

கன்னியாகுமரி மாவட்டம், மணவாள புரத்தை சேர்ந்த தம்பதியினர் முத்துராஜ்-ரதி இவர்களுக்கு மூன்று குழந்தை உள்ளனர். அதில் மூன்றாவது குழந்தை ஸ்ரீ ஹரிஷ். இந்த குழந்தைக்கு  2 வயது ஆகிறது. இந்த நிலையில், முத்து ராஜ், அவரது மனைவி மற்றும் அவரது மூன்றாவது குழந்தை மூன்று பேரும் குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை போடுவதாக வேண்டி  மாலை அணிவித்து விரதம் இருப்பதற்காக வந்தனர்.

அப்போது சேலத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவர்களிடம் நன்றாக பேசி பழகி வந்துள்ளார். இந்த நிலையில், ரதியின் கணவர் முத்துராஜ் கடைக்கு சென்று உள்ளார். ரதியும் வேலையாக வெளியில் சென்றுள்ளார். அப்போது ரதியுடன் நன்றாக பேசி அக்குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக சேலத்தை சேர்ந்த பெண் திலகாவதி குழந்தையை தூக்கி சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வரவில்லை. இதனையடுத்து சந்தேகம் அடைந்த முத்துராஜ், குழந்தையை தீவிரமாக தேடி வந்துள்ளனர். குழந்தை கிடைக்காததால், குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோரின் புகாரை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து குழந்தையை தேடி வந்தனர்.

பின் ஒரு பெண் இருசக்கர வாகனத்தில் குழந்தையை கொண்டு சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இதனை அடுத்து சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த திலகவதி – பாண்டியன் தம்பதி தான் அந்த குழந்தையை கடத்தி சென்றனர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் குழந்தையை மீட்பதற்காக சேலத்திற்கு முத்துராஜ்-ரதி தம்பதியை அழைத்துக் கொண்டு சென்றனர். குழந்தையை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.  திலகாவதி  – பாண்டியனை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது திலகாவதி மயங்கி விழுந்துள்ளார்.

போலீசார் உடனடியாக திலகாவதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பெண் உயிரிழந்த விவகாரத்தில் கோவை ஆலந்துறை காவல்நிலையத்திற்கு நேரில் சென்று நீதிபதி சந்தோஷ் விசாரணை மேற்கொண்டுள்ளார்.