தமிழகத்தில் இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்…!

தமிழகத்தில் இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. 

தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர், 500 சில்லறை விற்பனை மதுக்கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக்கோரிக்கையின் போது அறிவித்ததன் பேரில் தற்போது 500 மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக 500 டாஸ்மாக் சில்லறை விற்பனைக்கடைகளைக் கண்டறிந்து மூடுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது, இந்த அரசாணையில் குறிப்பிட்டது போல் தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகளில் 500 மதுபானக்கடைகள் இன்று முதல் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் இனி தமிழகத்தில் 5500 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்த நிலையில் 5000 கடைகளாக குறையவிருக்கிறது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக கோயில்கள், கல்வி நிலையங்கள் அருகில் இருக்கும் மதுபானக்கடைகள் முதலில் கண்டறியப்பட்டு 500 கடைகள் மூடப்பட இருக்கின்றன.

அதில், சென்னை மண்டலத்தில் 138 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. மதுரை மண்டலத்தில் – 125, திருச்சி மண்டலத்தில் – 100 கோவை மண்டலத்தில் – 78, சேலம் மண்டலத்தில் – 59 என மொத்தம் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.