2024 ஸ்டார்ட்ஸ்… புத்தாண்டை குதூகலத்துடன் வரவேற்ற பொதுமக்கள்…

2023 முடிந்து 2024ஆம் ஆண்டின் முதல் நாள் இன்று தொடங்கியுள்ளது. புத்தாண்டை வரவேற்க நேற்று இரவு முதலே, தமிழகத்தில் உள்ள கடற்கரை, மைதனங்கள், தேவாலயங்கள், கோயில்கள், சுற்றுலா தளங்கள் என பல்வேறு இடங்களில் மக்கள் ஒன்றுகூடி கொண்டாட்டம், பக்தி, மகிழ்ச்சி என பல்வேறு பரிமாணங்களில் புத்தாண்டை வரவேற்றனர்.

சென்னை மெரினா : 

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் என்றவுடன் உடனடியாக நினைவுக்கு வருவது சென்னை மெரினா கடற்கரை தான். வழக்கம் போல இந்தாண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் எந்த குறையும் இல்லாமல் பொதுமக்கள் 2024-ஐ உற்சாகமாக வரவேற்றனர். சென்னை டிஜிபி அலுவலகத்தின் அருகே மெரினா கடற்கரை சாலையில் பொதுமக்கள் குவிந்தனர். ஏற்கனவே காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர். காவல்துறையின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டம் பாதுகாப்பாக நிறைவுற்றது.

அதே, போல, சென்னை வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.  அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  வடபழனி முருகன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.,

விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்..!

புதுச்சேரி : 

புதுச்சேரியிலும் வழக்கமான ஆடல் பாடல் என குதூகலமான புத்தாண்டு கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. குறிப்பாக இளைஞர்களின் கொண்டாட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், சில இடங்களில் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கொண்டாட்ட கூட்டத்தை, களைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதே போல, புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு அதிகாலை முதலே தொடங்கியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விநாயகருக்கு தங்க கவசம் அணிவித்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

வேளாங்கண்ணி : 

உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு முதலே சிறப்பு திருப்பலி தொடங்கியது. புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். தஞ்சை பரிபாலகர் சகாயராஜ், புத்தாண்டு சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார்.  வேளாங்கண்ணி பேராலய அதிபர், பங்கு தந்தை, பாதிரியார்கள், பக்த்ர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஊட்டி, கொடைக்கானல் : 

புத்தாண்டு திங்களன்று வந்தததால், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையை கொண்டாட மக்கள் சுற்றுலா தளங்களில் குவிந்தனர். ஊட்டியில் தொட்டபெட்டா மலை, ரோஜா பூங்கா என பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கொடைக்கானலில் ஃபைன் பாரஸ்ட்,  குணா குகை, ஏரி என பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். ஊட்டி, கொடைக்கானல் போல ஏற்காடு பகுதியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதே போல கன்னியாகுமரி பகுதியிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.