பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17 -இல் தொடக்கம். அடுத்த ஆண்டு முதல் ஆன்-லைனில் கவுன்சீலிங்

சென்னை : பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு வரும் ஜூலை 17 ஆம் தேதி தொடங்கும் என தமிழக  உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வழக்கமாக எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர்தான்  பொறியியல் மாணவர் கலந்தாய்வு நடைபெறும். அதன்படி 2017-18 கல்வியாண்டுக்கான பி.இ. மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஜூன் 21 -ஆம் தேதி தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டது.
ஆனால், நீட் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாலும், எம்பிபிஎஸ் உள் ஒதுக்கீடு வழக்கு நிலுவையில் இருக்கும் காரணத்தாலும் பி.இ. கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனிடையே மருத்துவ சேர்க்கை இன்னும் தொடங்கப்படாத நிலையில், வரும் திங்கள்கிழமை முதல் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வைத் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் , நீட் தேர்வு முடிவு வெளிவந்த பிறகு, அதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் காரணத்தால், எம்பிபிஎஸ்  கலந்தாய்வு தொடங்குவது தாமதப்பட்டு, அதன் தொடர்ச்சியாக பி.இ. கலந்தாய்வைத் தொடங்குவது மேலும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
.
இதனால் ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வை வரும் திங்கட்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 18 ஆம் தேதி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி பிளஸ் 2 தொழில் கல்வி பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஜூலை 17, 18 தேதிகளில் நடைபெறும் 
மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு -ஜூலை 19
விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு -ஜூலை 19, 20
விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு -ஜூலை 21
பொதுப் பிரிவு கலந்தாய்வு -ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 11 வரை.
துணைக் கலந்தாய்வுக்கான பதிவு – ஆகஸ்ட் 16
பி.இ. துணைக் கலந்தாய்வு – ஆகஸ்ட் 17
அருந்ததியினர் உள்ஒதுக்கீட்டு காலி இடங்களில் எஸ்.சி. பிரிவினர் சேர்க்கை கலந்தாய்வு -ஆகஸ்ட்18 தேதி நடைபெறும் என தெரிவித்தார்.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 2018-19 கல்வியாண்டு முதல் ஆன்-லைன் கலந்தாய்வு முறையை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும்  உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழன் கூறினார்.

Leave a Comment