இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட 10 மீனவர்கள் விமானம் மூலம் தமிழகம் வந்தனர்.! 

தமிழகத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை ராணுவம் கைது செய்யும் செயல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தை தீர்வு காண  தமிழக அரசு, மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், அவ்வப்போது கைது, பிறகு சில நாட்கள் கழித்து நிபந்தனைகளுடன் விடுதலை என நடந்து வருகிறது.

அப்படி தான் தற்போது , நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 3ஆம் தேதி 10 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்களை கடந்த 7ஆம்இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்தனர்.

இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்கள்  திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவர்களை 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கடந்த 21ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்களை இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது.

இந்நிலையில் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, நாகை மாவட்ட 10 மீனவர்கள், இலங்கையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தடைந்தனர். தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்று, அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.