மக்களே கவனம்…கடந்த 2 வாரத்தில் ICU வில் இருப்போர் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரிப்பு!

தமிழகத்தில் கடந்த 2 வாரத்தில் ஐசியூவில் இருப்போர் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்,தமிழகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

அந்தவகையில்,தமிழகம் முழுவதும், 23,888 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ள நிலையில்,29 பேர் உயிரிழந்ததாக நேற்று தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும் 15,036 பேர் கொரோனாவிலிருந்து நலம் பெற்றுள்ள நிலையில், 1,61,171 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும்,சென்னையில் ஒரே நாளில் 8,305 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் நேற்று முன்தினம்,தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில்,நேற்று மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது.

corona

இந்நிலையில்,தமிழகத்தில் கடந்த 2 வாரத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூவில்) இருப்போர் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.அதே போன்று ஆக்சிஜன் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையும் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.குறிப்பாக, சென்னை,மதுரை ,கோவை,சேலம் வேலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில்தான் ஐசியூவில் இருப்போர் எண்ணிக்கை மற்றும் ஆக்சிஜன் தேவைப்படுவோர் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில்,கடந்த ஜனவரி 1 ஆம் தேதியன்று தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8340 பேர் ஆக இருந்த நிலையில்,அதில் 366 பேர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.ஆனால்,கடந்த ஜனவரி 17 ஆம் தேதியன்று கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 1,52,348 ஆக அதிகரித்து காணப்பட்டது.குறிப்பாக,அதில் ஐசியூவில் சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 814 ஆக உயர்ந்துள்ளது. அதாவது,தமிழகத்தில் உள்ள 9829 ஐசியூ படுக்கைகளில் 8.2% படுக்கைகள் தற்போது உபயோகத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஐசியூ சிகிச்சை பிரிவில் சென்னையில் தான் அதிக நோயாளிகள் உள்ளனர்.அதன்படி,கொரோனா பாதித்த 814 பேரில் 291 பேர் தீவிர சிகிச்சைப் பெறுகின்றனர்.மேலும்,சேலத்தில் 68 பேர்,கோவையில் 72 பேர்,வேலூரில் 51 பேர், மதுரையில் 49 பேர் என தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

அதே சமயம்,தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி ஆக்சிஜன் வசதி தேவைப்படுவோர் எண்ணிக்கை 1392 ஆக இருந்த நிலையில்,நேற்று முன்தினம்  4013 ஆக அதிகரித்துள்ளது.அதன்படி,தமிழகத்தில் உள்ள 40757 ஆக்சிஜன் படுக்கைகளில் 9.8% தற்போது பயன்பாட்டில் உள்ளன.அதாவது,சுமார் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது என்பது தெரிகிறது.

ஆக்சிஜன் தேவைப்படுவோரின் எண்ணிக்கையிலும் சென்னைதான் முதலிடத்தில் உள்ளது.அதன்படி,கொரோனா பாதித்தவர்களில் சென்னையில் 1407 பேரும்,மதுரையில் 291 பேரும்,கோவையில் 499 பேரும், வேலூரில் 193 பேரும்,சேலத்தில் 149 பேரும்  ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே,மக்கள் வெளியில் செல்லும்போது,குறிப்பாக கூட்டம் அதிகம் உள்ள பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் மற்றும் முகக்கவசம் அணிந்து கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.