அரிக்கொம்பனின் தற்போதைய நிலை என்ன? வெளியான அறிக்கை.!

கடந்த மாதம் கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் சுற்றி திரிந்த அரிக்கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் தமிழக எல்லையில் விட்ட நிலையில், இந்த யானை தேனி, கம்பம் பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்தது. இந்த யானை தாக்கியதில் பால்ராஜ் என்பவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, யானையை பிடிக்க வனத்துறையினர் கடுமையாக போராடி, இறுதியாக மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இந்நிலையில், பிடிப்பட்ட அரிக்கொம்பன் யானை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனத்துறையினால் 06.06.2023 அன்று விடப்பட்டது.

தற்போது, அரிக்கொம்பனின் தற்போதைய நிலைப் பற்றிய தகவலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 19ஆம் தேதி மற்றும் 20ஆம் தேதி ஆகிய தினங்களில் களக்காடு கோட்டத்தின் துணை இயக்குநர், சூழலியலாளர் மற்றும் முன்கள பணியாளர்கள் குழுவினருடன் மேல்கோதையாறு பகுதியில் யானையை கண்காணித்து வந்தனர். யானையானது சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதையும், உணவு மற்றும் தண்ணீர் நன்றாக உட்கொள்வதை நிபுணர் குழு கண்டறிந்தனர்.

மேலும், ரேடியோ காலரில் இருந்து பெறப்படும் சிக்னல் மூலம் யானையின் நடமாட்டம் தொடர்ந்து களப்பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரிக்கொம்பன் இருக்கும் இடத்தில் பிற யானைக்கூட்டங்கள் சுற்றித்திரிவது கண்டறியப்பட்டது. அரிகொம்பன் யானையினை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டு 75 நாட்கள் முடிவடைந்த நிலையில், தனது இரண்டாம் வசிப்பிடத்தில் ஆரோக்கியமாக காணப்படுகிறது.