நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குருவாளா பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார். இவருடைய மனைவி கீதா. இவர்கள் இருவருமே அப்பகுதியில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், தன்னுடைய மனைவி கீதா ஆசையாக டிராக்டர் ஓட்ட வேண்டும் என்று கணவர் சிவகுமாரிடம் கேட்டுள்ளார்.
உடனே சிவகுமார் இன்று தனக்கு சொந்தமான விவசாய இடத்தில் மனைவி கீதாவுக்கு டிராக்டர் ஓட்ட பயிற்சி கொடுத்துள்ளார். இதனையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் திடீரென அப்பகுதியில் இருந்த பள்ளத்தில் மோதி குப்புற விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் டிராக்டரின் அடியில் சிக்கி கணவர் சிவக்குமார், மனைவி கீதா இருவரும் தலை நசுங்கிசம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரது உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். டிராக்டர் கவிழ்ந்து இருவரும் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.