மாணவன் நலமுடன் இருக்கிறார்… அவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்.! அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.!

நாங்குநேரி மாணவரையும் அவரது சகோதரியையும் நேரில் சந்தித்து தங்கம் தென்னரசு, அப்பாவு ஆறுதல் தெரிவித்ததோடு, படிப்பு தடை படாமல் இருக்க, அரசு எப்போதும் உடன் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் முனியாண்டி என்பவரது மகன் சின்னதுரை (வயது 17) வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது மகள் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் சின்னதுரை படிக்கும் பள்ளியில் பயிலும் சில சக மாணவர்கள் அவர் மீது சாதிய ரீதியாக பாகுபாடு காட்டி துன்புறுத்தியுள்ளனர். இதனால், மனமுடைந்த சின்னத்துரை பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்துள்ளார்.

இந்த விவரம் அறிந்த ஆசிரியர் சாதிய ரீதியில் பாகுபாடு காட்டிய சக மாணவர்களை கண்டித்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட மாணவர்கள் சின்னதுரையை பழிவாங்க எண்ணி மாணவன் வீட்டுக்கே சென்று மாணவனை அறிவாளால் பல இடங்களில் வெட்டி உள்ளனர். அதனை தடுக்க சென்ற அவரது தங்கையையும் அந்த மாணவர் கும்பல் வெட்டி உள்ளது இருவரும் அரிவாள் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன

இந்நிலையில், சின்னதுரை, அவரது சகோதரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அவரது குடும்பத்திற்கு ஆறுதலையும் தெரிவித்தனர். அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீடியோ கால் மூலம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘தைரியமா இருங்க.. எதுக்கும் கவலைப்படாதீங்க’ என்று தொலைபேசி வாயிலாக கூறி மாணவர்களின் தாயாருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சர் உத்தரவின் பேரில் மாணவனை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளோம். மாணவனின் தாயாரிடம் முதலமைச்சர் தொலைபேசி வாயிலாக பேசி, அவர்களுடைய படிப்பு தடை படாமல் இருக்க, அரசு எப்போதும் உடன் இருக்கும் என்பதை தெரிவித்துள்ளார். அனைத்து வகையான உயர்சிகிச்சை வழங்கப்பட்டு, தற்போது மாணவன் நலமுடன் இருக்கிறார், இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.