அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்தார் தெலுங்கானா முதலமைச்சர்!

நாட்டில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவையில் தேர்தலில் தெலுங்கானாவில் மட்டும் வெற்றி பெற்ற காங்கிரஸ், அம்மாநிலத்தில் நேற்று முன்தினம் ஆட்சியை அமைத்தது. தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.

அதன்படி, தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராகவும், துணை முதல்வராக பாட்டி விக்ரமார்காவும் நேற்று முன்தினம் பதவியேற்றனர். தெலுங்கானா அமைச்சரவையில், உத்தம் குமார் ரெட்டி, தாமோதர் ராஜநரசிம்மா, கோமாட்டிரெட்டி, டி.ஸ்ரீதர் பாபு, பொங்குலேடி சீனிவாச ரெட்டி, பொன்னம் பிரபாகர், சுரேகா கோண்டா, அனசுயா சீதக்கா, தும்மல நாகேஸ்வர ராவ, ஜூபல்லி கிருஷ்ணராவ் ஆகியோர் பதவியேற்றனர்.

இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், தெலுங்கானாவில் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்து அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். பதவியேற்ற 11 அமைச்சர்களின் அனுபவம் மற்றும் பணி மூப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இலாகாக்களை ஒதுக்கீடு செய்துள்ளார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.

இதே விஷயத்தை காங்கிரஸ் செய்தால் பாஜகவினர் கூச்சலிட்டிருப்பார்கள்.. அசோக் கெலாட் விமர்சனம்.!

இதில், உள்துறை, சட்டம்-ஒழுங்கு, நகராட்சி நிர்வாகம் போன்ற முக்கிய இலாகாக்களை முதல்வர் தன்னிடம் வைத்துள்ளார். இதுபோன்று, தெலுங்கானா துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்காவுக்கு நிதி, திட்டமிடல் மற்றும் எரிசக்தி துறைகளும், மற்றொரு மூத்த அமைச்சர் உத்தம் குமார் ரெட்டிக்கு முக்கிய துறையான நீர்ப்பாசனம் மற்றும் சிவில் சப்ளை துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் பொங்குலெட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டிக்கு வருவாய், வீட்டுவசதி மற்றும் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறையும்,  தும்மல நாகேஸ்வர ராவ் விவசாயத் துறையும், கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி, சாலைகள், கட்டிடங்கள், ஒளிப்பதிவு ஆகிய துறைகளும், தாமோதர் ராஜா நரசிம்மாவுக்கு சுகாதாரம், மருத்துவம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும், டி ஸ்ரீதர் பாபு தொழில்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துடன் சட்டமன்ற விவகாரங்களையும் கவனிப்பார். ஜூபல்லி கிருஷ்ணா ராவுக்கு கலால், சுற்றுலா மற்றும் கலாச்சாரம் துறைகளும், பொன்னம் பிரபாகருக்கு பிசி நலன் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா அமைச்சரவையில் உள்ள இரண்டு பெண் அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் சுரேகாவுக்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டி.அனசூயா என்ற சீதக்காவுக்கு பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையில் மேலும் ஆறு அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்