பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் பதவியேற்கும் ஷெபாஸ் ஷெரீப்

Shehbaz Sharif: பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்கவுள்ளார். பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ம் தேதி பல்வேறு பரபரப்பு சம்பவங்களுக்கு மத்தியில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவு வேட்பாளர்கள் பல்வேறு இடங்களை கைப்பற்றிய போதும் முழு ஆதரவு கிடைக்கவில்லை.

அதே போல் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கணிசமான தொகுதிகளை கைப்பற்றின. இதையடுத்து தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கூட்டணி ஆட்சியின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இன்று இரண்டாவது முறையாக அவர் பிரதமராக பதவியேற்கிறார்.

Read More – அமெரிக்காவில் மீண்டும் அதிர்ச்சி..! இந்திய நடனக் கலைஞர் சுட்டுக்கொலை

பிரதமரை தொடர்ந்து நாடாளுமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர் உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிரதமர், சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வை தொடர்ந்து அதிபர் மாளிகையான ஐவான்-இ-சதரில் நடைபெறும் விழாவில் புதிய பிரதமர் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பிறகு ஷெபாஸ் ஷெரீப் பேசுகையில், ”பயங்கரவாதம் நாட்டில் இருந்து அடியோடு அகற்றப்படும். புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தப்படும்” என்றார்.

Leave a Comment