பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் : நாடாளுமன்றத்தில் தீக்குளிக்க திட்டம்.? டெல்லி போலீசார் அதிர்ச்சி தகவல்.!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் நாடாளுமன்ற நிகழ்வுகளை பார்வையிட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா ஆகியோர் உள்ளே வந்து திடீரென மக்களவைக்குள் குதித்து வண்ண பூச்சிகளை வெளிப்படுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதே நேரத்தில் வெளியில் ஹரியானாவை சேர்ந்த நீலம் எனும் மாணவி மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த அமோல் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் அதே போல வண்ணப்பூச்சிகளை வெளியிட்டு கோஷமிட்டனர். அதனை லலித் என்பவர் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இவர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் விஷால் சர்மா என்பவர் நாடாளுமன்றம் அழைத்து வர உதவி செய்துள்ளார்.

நாடாளுமன்ற அத்துமீறல்.. முக்கிய ஆதாரங்களை எரித்த லலித்.? தீவிரமடையும் விசாரணை.!

இவர்கள் அனைவரும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது விசரணையில் உள்ளனர். இந்த வழக்கில், மனோரஞ்சன் மற்றும் சாகர் சர்மாவுக்கு பாராளுமன்ற பார்வையாளர் அனுமதி வழங்கிய கர்நாடக பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். எதன் அடிப்படையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என பதில் அளிக்க பாஜக எம்பி மற்றும் அவரது உதவியாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் தனியார் செய்தி நிறுவனத்திற்கு தகவல் அளித்ததில், கைது செய்யப்பட்டுள்ள சாகர் சர்மா, மனோரஞ்சன் டி, அமோல் ஷிண்டே, நீலம் தேவி மற்றும் லலித் மோகன் ஜா ஆகியோர் சம்பவத்தை நடத்த ஏழு புகை வெடிபொருள் உடன் வந்துள்ளனர். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னர், அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த எண்ணியுள்ளனராம்.

அவர்கள் முதலில் தங்கள் உடலை  தீ காயம் படாதபடி ஜெல் போன்ற திரவம் மூலம் பூசிக்கொண்டு தங்களைத் தாங்களே தீயிட்டு கொள்ளவும், அப்போது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை பரப்பவும் ஆராய்ந்தனர். ஆனால் இந்த யோசனையை அவர்கள் கைவிட்டுவிட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சிக்னல் செயலி (Signal app) மூலம் மாட்டிக் கொள்ளாதபடி தொடர்பு கொண்டுள்ளனர்.

தங்கள் கருத்துக்கள் ஊடகங்கள் மூலம் மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக இருந்துள்ளது. அதனால் தான் பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது பாராளுமன்றத்திற்குள் நுழைவதை தங்கள் திட்டமாக கைது செய்யபட்டவர்கள் எண்ணியுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.