ஒடிசா விபத்து…இரண்டாவது நாளாக அமைச்சர் உதயநிதி தலைமையிலான தமிழக குழு ஆய்வு!

ஒடிசா பாலசோர் ரயில் விபத்தில் 2-வது நாளாக உதயநிதி தலைமையிலான தமிழக குழு ஆய்வு செய்துவருகிறது.

ஒடிசாவில் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய பெரும் விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் உயிரிழந்தவர்களின் 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்தார்.

விபத்து குறித்தும் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்கள் அங்கு சிக்கியுள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு செய்ய தமிழகத்திலிருந்து நேற்று அமைச்சர் உதயநிதி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் குழுவுடன் நேற்று ஒடிசா புறப்பட்டு சென்றது. நேற்று விபத்து நடந்த பாலசோர் மற்றும் மருத்துவமனையில் காயமடைந்தோரை சந்தித்து அமைச்சர் உதயநிதி நலம் விசாரித்தார்.

மேலும் விபத்தில் பலியான உடல்கள் மீட்கப்பட்டுள்ள இடங்களையும் சென்று விவரங்களையும் கேட்டறிந்தார். இன்றும் இரண்டாவது நாளாகவும் ஒடிசா ரயில் விபத்து மீட்பு பணி குறித்த நடவடிக்கைகளில் தமிழக குழு ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து உதயநிதி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, புவனேஸ்வரிலுள்ள ஓடிசா சிறப்பு மீட்பு ஆணையர் அலுவலகத்தில், அம்மாநில தலைமைச் செயலாளர் திரு.பிரதீப் ஜெனா உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று காயமடைந்து சிகிச்சை பெற்றவர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்ததாக தெரிவிட்டுள்ளார்.