பட்டாசு ஆலை விபத்து! 11 பேர் பலி – முதல்வர் நிவாரண தொகை அறிவிப்பு!

சிவகாசியில் இன்று ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எம்.புதுப்பட்டி ரெங்கபாளையத்தில் இயங்கி வரும் சுந்திரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கனிஷ்கர் பட்டாசு ஆலை வளாகத்தில் பட்டாசுகளை சோதனை செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 9  பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுபோன்று, சிவகாசி அருகே மாறனேரி தாலுகா கிச்சநாயக்கன்பட்டியில் உள்ள முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் வேம்பு என்கிற தொழிலாளி ஒருவர் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 11 உயிரிழந்த நிலையில், சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவகாசியில் இருவேறு இடங்களில் பட்டாசு விபத்து – பலி எண்ணிக்கை 11-ஆக அதிகரிப்பு!!

இந்த சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், சிவகாசியில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், மாரனேரி கிராமம், கிச்சநாயக்கன்பட்டி மற்றும் சிவகாசி வட்டம், மங்களம் கிராமம் ஆகிய இருவேறு இடங்களில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலைகளில் இன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும்
தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்றுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்