தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மீதான தடை… மேலும் ஓராண்டுக்கு தடை நீட்டிப்பு.!

தமிழ்நாட்டில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டு உத்தரவு.

நிகோடின் அடங்கிய குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு தமிழ்நாட்டில் விதித்துள்ள தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி குட்கா, பான் மசாலா, மற்றும் புகையிலைப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு விநியோகம் அல்லது விற்பனை மீதான தடை மே 23 முதல் ஓராண்டுக்கு தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக குட்கா பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து கடந்த 2018ம் ஆண்டு தமிழக அரசு, அரசாணை ஒன்றை வெளியிட்டது. பின்னர், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்ட்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் முறையிட்டார்.

மேலும், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்து, குட்கா பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து  தமிழக அரசு புதிய அரசாணை வெளியிடவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில் இதற்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.