அமித்ஷா கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது – பாமக நிறுவனர் ராமதாஸ்

அமித்ஷா கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது – பாமக நிறுவனர் ராமதாஸ்

அனைத்து மாநில மக்களின் விருப்பங்களும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவு.

ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி மொழியை பேச வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு மொழியாக இந்திய மொழியான இந்தி தான் இருக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதன் பொருள் மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படும் என்பது தான். இந்தி இந்தியாவில் சற்று அதிகமாக பேசப்படும் மொழி. அதற்காகவே அதை மற்ற மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது என்பது தான் கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக இந்தி பேசாத மாநிலங்கள் எழுப்பி வரும் குரல் ஆகும். அதை ஏற்றுத் தான் ஆங்கிலம் இணைப்பு மொழியாக தொடர நேரு அனுமதித்தார் என்பது வரலாறு.

இந்தியாவின் மொழி தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டுமானால், அந்தத் தகுதி நாட்டின் பழமையான மொழியான தமிழுக்கு தான் உண்டு. ஆனாலும், மொழித் திணிப்பில் தமிழகத்திற்கு விருப்பமில்லை என்பதால் தான் எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழியாக்கக் கோருகிறோம்.

இந்தியாவில் ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் தொடர வேண்டும். தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். பிற மொழிகளை கற்கும் விஷயத்தில் அனைத்து மாநில மக்களின் விருப்பங்களும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube