குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு ! சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றிய 4 -வது மாநிலம்

  • குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளா ,பஞ்சாப், ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றியது.
  • இதனைத்தொடர்ந்து மேற்குவங்க மாநில சட்டப்பேரவையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது.இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்திற்கு கேரளா ,மேற்கு வங்கம்,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

குறிப்பாக கேரளா மற்றும் மேற்கு வங்க மாநில முதல்வர்களே இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியா கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டும் அல்லாமல் சட்டத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. எதிர்கட்சியான காங்கிரசும், ஆளும்கட்சியுடன் கைகோர்த்து இந்த போராட்டத்தில் பங்கேற்றது.இதன் பின்பு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் பினராயி விஜயன்.இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

கேரள அரசு போலவே மேற்கு வங்க அரசும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு வருகின்றது.மேற்கு வங்க மாநில முதலமைச்சரான மம்தா பனர்ஜியும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்,பேரணிகள் என்று நடத்தியுள்ளார்.இந்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் மம்தா கூறி வந்தார்.இந்நிலையில் இன்று  குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பஞ்சாப்,ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களும் இதற்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.