சென்னை:வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடங்கியிருக்கிறது. திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் இரவு முதல் மழை பெய்து வருகிறது.
இதனால், மயிலாடுதுறை மாவட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாடு நோக்கி நகர்வதால் டெல்டா மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
unknown nodeடெல்டா வெதர்மேன்
டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்த 36 மணி நேரத்திற்கு அதித கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று (11.12.2024) இரவு 7 மணி முதல் நாளை (12.12.2024) இரவு 7 மணி வரை பரவலாக தொடர் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.
மேலும், சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களிலும் விட்டு விட்டு கனமழை பதிவாகும். டிசம்பர் 11ம் தேதி துவங்கியுள்ள நான்காம் சுற்று மழை டிசம்பர் 13ம் தேதி இரவு வரை டெல்டா & வடகடலோர மாவட்டங்களில் நீட்க்கும்எனவும் குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeகனமழை எச்சரிக்கை
இதனிடையே, தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது, இலங்கை – தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதன் காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று வானிலை மையம் மிகக்கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்து, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சி, சென்னை, திருவள்ளூரில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
மேலும், நாளை தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சியில் மிக கனமழை பெய்யலாம் எனவும் கணித்துள்ளது.
