“மத்திய அரசை தூக்கி எறிய சக்திமிக்க தலைவர் முக.ஸ்டாலின்” V.B துரைசாமி
விழுப்புரம், செப் -விழுப்புரத்தில் நடை பெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, மத்தியில் இருக்கிற மதவாத பா.ஜ.க. அரசைத் தூக்கி எறியும் மாபெரும் சக்தி வாய்ந்த தலைவராக மு.க. ஸ்டாலின் அவர்கள் உருவாகி இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.
விழுப்புரம் திமுக முப்பெரும் விழாவில் துணைப் பொதுச் செயலாளர் வி.பி.சாமி பேசியதாவது:- தலைவர் கலைஞர் அவர்கள் கழகத் தலைவராக இருந்தபொழுதும் சரி, முதலமைச்சராக இருந்த பொழுதும் சரி – அவர்களுக்கு என்னென்ன வகையான நெருக்கடிகள் வந்ததோ, அதே நெருக்கடிதான் இன்றைய தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் வந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் இந்தியாவில் மிகப்பெரிய புரட்சிகரமான திட்டம் மன்னர் மானிய ஒழிப்புத் திட்டம் ஏற்பட்டது.அதைவிட இந்தியாவில் வாழ்கின்ற 300 கோடி பிற்படுத்தப்பட்ட மக்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கும், கல்வி அறிவு பெறுவதற்கும் மண்டல் கமிஷன் நிறைவேற்றிய மாபெரும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.
ஏழை மக்களுக்கு எதிரான மோடியின் அராஜகம் தலைவர் கலைஞர் எந்த நோக்கத்திற்காக வங்கிகளை தேசியமய மாக்குவதற்கு உதவி செய்தார்களோ அதையெல்லாம் முற்றிலுமாக மறந்து, ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 லட்சம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு, வறுமையை ஒழிப்பேன் என்று பொய்யான வாக்குறுதியை வழங்கிய மோடி அவர்கள், இன்றைக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் அனைத்துப் பணமும், பொருளாதாரமும் ஒரு பன்னிரெண்டு பேருக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது. அந்த பணமெல்லாம் அன்றாடங்காய்ச்சிகள் சேமித்து வைத்திருந்த பணம். அன்றைக்கு கலைஞர் அவர்கள் இந்தியாவில் இருக்கின்ற ஏழைகளுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக வங்கிகளை தேசிய மயமாக்குவதற்கு மாபெரும் புரட்சி செய்தார். இன்றைக்கு மோடி அரசாங்கம் வங்கிகளை பன்னிரெண்டு நபர்களுக்காக நடந்து கொண்டிருக்கிறது.
70 ஆண்டு காலம் – சுதந்திரம் அடைந்த பிறகும் நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமோ என்ற கேள்வி சந்தேகம் கடந்த நான்கு ஆண்டு காலமாக எல்லோருக்கும் வந்திருக்கிறது. உண்ணும் உணவு, உடுக்கும் உடை, இருக்கும் இடம் இதைக்கூட ஒரு மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றால், அந்த மத்திய அரசை தூக்கி எறிவதற்கு வியூகம் அமைத்திருக்கிற ஒரு சூழ்நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.அதே போல் வசூல் ராஜாக்கள் ஆட்சியை அகற்றுவோம் அதேபோல, எல்லாவற்றிலும் கமிஷன் வாங்குகின்ற வசூல் ராஜாக்களாக இருக்கின்ற இந்த அரசு தூக்கி எறியப்பட வேண்டும். தமிழனுக்கு இன உணர்வு அற்றுப் போகின்ற வகையில் நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசுக்கு துணை போகின்ற இந்த தமிழக அரசை நாம் தூக்கி எறிய வேண்டும்.
மத்திய அரசை தூக்கி எறிகின்ற பணியில் இந்தியாவின் மிகப்பெரிய சக்திமிக்க தலைவராக நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவாகி இருக்கிறார்கள். கடந்த மாதம் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் இந்தியாவிற்கு நீங்கள் வழிகாட்ட வேண்டும் தளபதி அவர்களே, இந்தியாவினுடைய தலைமைச் செயலகமாக இனி அறிவாலயம் மாற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களே, அந்த வகையிலே, வியூகத்தை அமைத்துத் தாருங்கள், பணி முடிக்க காத்திருக்கிறோம். இவ்வாறு கழக துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரை சாமி பேசினார்.
DINASUVADU