சீன அதிபருக்கு பாராட்டு தெரிவித்த வடகொரிய அதிபர்.!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்கைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார்.
சீனா உஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், அமெரிக்கா, ஐரேப்பிய நாடுகளில் கோரத்தாண்டம் ஆடி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 39,48,089 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 2,71,725 ஆகவும் உள்ளது. மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,58,286 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82,886 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 4,633 ஆகவும் உள்ளது. மேலும் சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் சுமார் 70 நாட்களுக்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்திருந்தது. ஊரடங்கு தளர்வால் அந்நாட்டில் இயல்பு வாழ்கை திரும்பியுள்ளது. இந்த நிலையில், வடகொரிய அதிபர் கிம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்கைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அந்நாட்டு ஊடங்கங்கள் வெளியிட்டுள்ள தகவலில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற சீனாவுக்கு வடகொரிய அதிபர் கிம் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கிம் உடல் நலம் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் விசாரித்துள்ளார் என்று கூறியுள்ளது. வடகொரியா அதிபர் கிம் உடல்நலம் குறைவால் நீண்ட நாட்களுக்கு பின்தான் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.