நேபாளம் விமான விபத்து:14 பேரின் உடல்கள் மீட்பு- மீதமுள்ளவர்களின் நிலை என்ன?..!
நேபாளத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து 4 இந்தியர்கள் உட்பட 22 பேருடன் நேற்று காலை தாரா ஏர் என்ற விமானம் புறப்பட்ட நிலையில்,சில நிமிடங்களில் விமானம் மாயமானது. இதனைத் தொடர்ந்து,மாயமான விமானத்தை தேடும் பணியில் நேபாள ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில்,நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள தசாங் பகுதியில் உள்ள சனோஸ்வேர்பிர் என்ற இடத்தில் சுமார் 20 மணி நேரத்திற்குப் பிறகு விபத்து நடந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,விமானத்தில் பயணித்த 22 பேரின் நிலை என்ன? யாராவது உயிருடன் உள்ளனரா? என்பது குறித்து நேபாளம் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில்,நேபாளத்தில் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் இடிபாடுகளில் இருந்து 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது எனவும் மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக காத்மாண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மீதமுள்ளவர்களை தேடும் பணி தொடர்கிறது எனவும்,வானிலை மிகவும் மோசமாக உள்ளது எனவும் நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே,நான்கு இந்தியர்களை அடையாளம் கண்டுள்ள பயணிகளின் பட்டியலை விமான நிறுவனம் வெளியிட்டது.அதன்படி, அசோக் குமார் திரிபாதி,அவரது மனைவி வைபவி பண்டேகர் (திரிபாதி) மற்றும் அவர்களது குழந்தைகள் தனுஷ் மற்றும் ரித்திகா ஆகியோர் இந்த விமானத்தில் பயணித்ததாக தெரிவித்துள்ளது.