முன்னாள் மனைவி மீதான அவதூறு வழக்கு – பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் வெற்றி!
பிரபல ஹாலிவுட் திரைப்படமான “பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகப் புகழ்ப்பெற்ற ஜானி டெப்,கடந்த 2015 ஆம் ஆண்டு தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட்டை காதலித்து திருமணம் செய்தார். ஆனால்,அந்த திருமண பந்தம் நீண்ட வருடங்கள் நீடிக்கவில்லை. மாறாக,இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக திருமணமான 15 மாதங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து,கடந்த 2018 ஆம் ஆண்டு ஜானியின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட் ‘வாஷிங்டன் போஸ்ட்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஒரு கட்டுரை எழுதிய நிலையில்,அவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.இதனால்,ஜானி டெப் பட வாய்ப்புகளை இழந்தார்.குறிப்பாக,’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படத்திலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
இதனையடுத்து,ஜானி டெப் தனது நற்பெயரை மீட்டெடுக்க ஃபேர்ஃபாக்ஸ் கவுண்டி சர்க்யூட் நீதிமன்றத்தில் ஹேர்டு மீது அவதூறு வழக்குத் தொடுத்தார்.குறிப்பாக,டிசம்பர் 2018 இல் ஆம்பர் தி வாஷிங்டன் போஸ்ட்டில் எழுதிய ஒரு பதிப்பில் தனது பெயர் குறிப்பிடப்படவே இல்லை என்றாலும் அவர் அவதூறு செய்ததாக ஜானி டெப் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு அவதூறு பற்றியதாக இருந்தபோதிலும்,பெரும்பாலான சாட்சியங்கள் அவர் கூறியது போல் ஹேர்டு உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டாரா என்பதில் கவனம் செலுத்தியது.
இந்நிலையில்,3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில்,ஜானி டெப்புக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.அதன்படி, அவதூறுக்கு ஆளானதை நிரூபிக்க ஜானி டெப்புக்கு முகாந்திரம் இருப்பதால்,இந்திய மதிப்பில் சுமார் 116 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஆம்பர் ஹியர்ட்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து ஜானி டெப் கருத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது:”ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, என் வாழ்க்கை, என் குழந்தைகளின் வாழ்க்கை, எனக்கு நெருக்கமானவர்களின் வாழ்க்கை, மேலும், பல ஆண்டுகளாக என்னை ஆதரித்து நம்பிய மக்களின் வாழ்க்கை என்றென்றும் மாறிவிட்டது.ஊடகங்கள் வழியாக என் மீது பொய்யான, மிகத் தீவிரமான மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்நிலையில்,என்னுடைய வாழ்க்கையை நீதிபதி எனக்கு திருப்பி கொடுத்துள்ளார். இந்த நிலைக்கு வருவதற்கு தங்கள் நேரத்தை தியாகம் செய்த நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் ஷெரிப்களின் உன்னதமான பணியை நான் ஒப்புக்கொள்கிறேன்.”என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram