சவுதி இளவரசர் மீது புகார் …சொத்துகள் பறிக்கப்பட்டதாக அரச குடும்பத்தினர் புலம்பல்…
இளவரசர் மீது சவுதியில், அரச குடும்பத்தினர் கைது செய்யப்பட்ட நடவடிக்கையின்போது, அவர்களைத் துன்புறுத்தி, சொத்துகளைப் பறித்துக் கொண்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
சகல வளமும் கொழிக்கும் நாடாக கருதப்பட்ட சவுதியின் பிரமிக்க வைக்கும் பிம்பம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதி திடீரென நொறுங்கிச் சரிந்தது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் 200க்கும் மேற்பட்ட அரச குடும்பத்தினரும், பெரும் தொழிலதிபர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டு, ரிட்ஸ் கார்ல்டன் (Rits Carlton) என்ற சொகுசு நட்சத்திர விடுதியில் அடைத்து வைக்கப்பட்டனர்.
சுமார் மூன்று மாதங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டனர். அப்போது தவறான வழியில் குவித்த சொத்துகளை அரசு கருவூலத்தில் செலுத்திவிட்டு அனைவரும் விடுதலையானதாக கூறப்பட்டது. ஆனால், கைது செய்யப்பட்டிருந்த காலக்கட்டத்தில், பெரும் சித்திரவதைக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளானதாக விடுதலையானவர்களில் பலர் தற்போது புலம்பத் தொடங்கி உள்ளனர்.
அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களுக்குள், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் காட்டிக் கொடுப்பதற்கான கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். பெயரளவுக்கே தாங்கள் சுதந்திரமாக உலவி வருவதாகவும், தங்களது சொத்துகள் அனைத்தையும் இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammed Bin Salman) அபகரித்துக் கொண்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ரிட்ஸ் கார்ல்டன் சொகுசு விடுதிக்குள் நடந்த சித்திரவதையில், விடுதலையானவர்களில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் இறந்தே விட்டதாகவும் கூறுகின்றனர். எந்த நேரமும், அச்சமும், பதற்றமுமாக நிச்சயமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர், சவுதி என்ற கனவுதேசத்தின் கனவான்களாக கருதப்பட்ட முன்னாள் செல்வந்தர்கள்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.