கர்நாடக அணையில் இருந்து வரும் நீரின் அளவு குறைப்பு!!
தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே, ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., ஆகிய அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகளில் இருந்து,ஆண்டுதோறும், தமிழகத்தின் தேவைக்காக,192 டி.எம்.சி., நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும். முறைப்படி தண்ணீர் வழங்காமல், கர்நாடக அரசு மறுத்து வருகிறது.தென் மேற்கு பருவமழை துவங்கியதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து துவங்கியது. இதையடுத்து, காவிரியில், வினாடிக்கு, 4,000 கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டது. இது, சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு வருகிறது.கர்நாடகாவில், சில நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், நான்கு அணைகளுக்கும் நீர்வரத்து அபரிமிதமாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், நான்கு அணைகளும் விரைவில் நிரம்ப வாய்ப்பு உள்ளது.அதே நேரம், காவிரியில் நீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது. நான்கு அணைகளில் இருந்தும், வினாடிக்கு, 3,707 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது.இதனால், மேட்டூர் அணை நீர்வரத்து மேலும் சரியும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர்.