இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார்? இன்று தான் முடிவுக்கு வரும்..!
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.
தற்போது குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இந்த மாதம் 25ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அப்பதவிக்கான தேர்தல் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. 99 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாநிலங்களில் வாக்களித்த வாக்குப் பெட்டிகள் அன்றைய தினமே விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.
இதில் 4,896 எம்.பிக்கள், எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனர். இதற்காக நாடாளுமன்ற வளாகத்திலும், மாநில தலைமை செயலகங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
மொத்தம் 5 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் நாடாளுமன்றத்தில் வாக்களித்த வாக்கு பெட்டிகளும், பின்னர் மாநிலங்களிலிருந்து வந்துள்ள வாக்கு பெட்டிகளும் எண்ணப்படும். இந்த பணியானது காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது