மேற்கு வங்கத்தில் பா.ஜ., புது வியூகம்..,
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள பஞ்சாயத்து மற்றும் 2019 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, அம்மாநில மக்களை ஈர்க்க, புதிய வியூகத்தை, பா.ஜ., வகுத்துள்ளது. மேற்கு வங்க மக்களுக்கு மிகவும் பிடித்த, மீன், விளையாட்டு, இசை தொடர்பான திருவிழாக்கள், போட்டிகளை நடத்த, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது.இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில், பா.ஜ., ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பஞ்சாயத்து தேர்தல் மற்றும் 2019 லோக்சபா தேர்தலில், மிகப் பெரிய வெற்றியை பெறுவதற்கான முயற்சிகளில், கட்சியின் மாநிலத் தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.இது குறித்து, மேற்கு வங்க, பா.ஜ., தலைவர் திலிப் கோஷ் கூறியதாவது:மேற்கு வங்க மக்களுக்கு, மீன் மிகவும் பிடித்த உணவு. கால்பந்து, கிரிக்கெட், கபடி, கேரம் போன்ற விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். அதேபோல், இசையிலும் மிகுந்த நாட்டம் உடையவர்கள்.பெங்காலிகளுக்கு பிடித்த, இந்த மூன்று துறைகளில், போட்டிகள், விழாக்களை மாநிலம் முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், மேற்கு வங்கத்தின் பட்டி தொட்டியெல்லாம், பா.ஜ., பிரபலமடையும்.அதே நேரத்தில், விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம், கட்சித் தொண்டர்களும், நல்ல உடல் நலம், மன நலத்துடன் விளங்குவர்.