மின்இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட்ட நிர்வாகத்தை கண்டித்து சத்தியமங்கலம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்…!
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கொடிவேரி வரை உள்ள பவானி ஆற்றங்கரையோரம் உள்ள கிணறுகளில் விவசாயிகள் மின்இணைப்பு பெற்று தங்களது தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர். இந்நிலையில் பருவமழை பொய்த்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்ததால் அணையிலிருந்து தற்போது குடிநீர் தேவைக்கு பவானி ஆற்றில் 190 கனஅடிநீர் மட்டுமே நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீருக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீரை உறிஞ்சக்கூடாது என பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த 5 தினங்களுக்கு பவானி ஆற்றங்கரையோரத்தில் உள்ள விவசாய மின்இணைப்புகளை துண்டிப்பதோடு பைப் லைன்கள் அகற்ற கலெக்டர் பிரபாகர் திடீரென உத்தரவிட்டார். இதையறிந்த சத்தியமங்கலம் பகுதி விவசாயிகள் ஆத்திரமடைந்தனர். மின்இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட்ட நிர்வாகத்தை கண்டித்து சத்தியமங்கலம் பஸ்நிலையம் முன்பு 50க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று திரண்டனர். கோபி, மைசூர், கோவை சாலை சந்திப்பில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
கோபி வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், தாசில்தார் புகழேந்தி, டிஎஸ்பிக்கள் பழனிச்சாமி, செல்வம் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட நிர்வாகம் மூலம் அரசாங்கத்திற்கு தகவல் தெரிவித்து முடிவெடுக்கும் வரை மின்இணைப்பை துண்டிப்பதில்லை என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து 2 மணி நேர மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.