முரசொலியின் பவள விழாவிற்கு கடிதம் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்:பிரதமர் மோடி
திமுக -வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் பவள விழாவிற்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
திமுக – நாளிதழான முரசொலி கடந்த 1942 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு அந்த நாளிதழ் பவள விழாவை கொண்டாடுகிறது. இதற்கான விழா வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரும் வாழ்த்துரை வழங்குவார்கள் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனும் விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளார்.
. இவர்கள் தவிர, திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர். ஏற்கனவே, விழாவில் பங்கேற்குமாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோருக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் விழாவில் பங்கேற்க இயலவில்லை என்று, ஸ்டாலினுக்கு வைகோ கடிதம் எழுதியிருந்தார். இதனால், அவரது பெயர் அழைப்பிதழில் இடம்பெறவில்லை.
கமல்ஹாசன் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு அ.தி.மு.க அரசை விமர்சிப்பதாக அமைச்சர்கள் சிலர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், முரசொலி பவளவிழாவில் கமல்ஹாசன் பங்கேற்க இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.
முரசொலி பவள விழாவுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்களும் ஏற்கனவே வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் முரசொலி பவள விழா வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துத் தெரிவிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.