நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி : நாகலாந்து முதல்வர்
கோஹிமா: நாகாலாந்து சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், பா.ஜ., மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன், முதல்வர், டி.ஆர். ஜெலியாங் வெற்றி பெற்றார்.வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், நாகா மக்கள் முன்னணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக இருந்த கட்சித் தலைவர் லீஜிட்சுக்கு எதிராக, முன்னாள் முதல்வர் ஜெலியாங் போர்க்கொடி துாக்கினார். தனக்கு, பெரும்பாலான, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருப்பதாக, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.இந்நிலையில், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, லீஜிட்சுக்கு, கவர்னர், பி.பி. ஆச்சாரியா உத்தரவிட்டிருந்தார். அதை எதிர்த்து, லீஜிட்சு தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.அதையடுத்து, ஜெலியாங் மீண்டும் முதல்வரானார். ‘சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்’ என, அவருக்கு கவர்னர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நம்பிக்கை ஓட்டெடுப்பு நேற்று நடந்தது. மொத்தம், 60 தொகுதிகள் உடைய சட்ட சபையில், ஒரு இடம் காலியாக உள்ளது. நம்பிக்கை ஓட்டெடுப்பில், 59 பேரில், ஜெலியாங்குக்கு, 47 ஓட்டுகள் கிடைத்தன.