தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள்
சேலம்: தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், 150 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. இதில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை துவக்கப்பள்ளியாகவும், ஆறாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை உயர்நிலைப்பள்ளியாகவும், இரு அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உயர்நிலைப்பள்ளிகள் செயல்பாடு குறித்து, சில உத்தரவுகளை பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.அதில், கூறியிருப்பதாவது: உயர்நிலைப்பள்ளிக்கு தேவையான இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஏற்படுத்தித்தர வேண்டும். இப்பள்ளிகளுக்கு, புதிதாக ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம், ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள், பதவி உயர்வு மற்றும் பணிநிரவல் மூலம் நிரப்பப்படும். மாவட்டக் கல்வி அலுவலர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளை ஆய்வு செய்து, அரசாணையின் அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்துள்ளதா என்பது குறித்து, இயக்குனருக்கு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும்.அதேபோல், ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதித்து, அவை தொடங்கப்பட்டதற்கான அறிக்கையும் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.