தூத்துக்குடியில் கழிப்பறை விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார்: மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ்
தூத்துக்குடி ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாக சங்கு கூடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் தூய்மை பாரத இயக்கும் – தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டுவது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வெளியிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொலைதூர பார்வையில் தமிழகம் 2023 என்ற நோக்கத்தில் தமிழகத்தை திறந்த வெயிலில் மலம் கழிக்கும் பழக்கம் அற்ற மாநிலமாக, உருவாக்க, முன்னோடித் திட்டமாக 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்ட உரையில் ரூ.15 இலட்சம் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளதன் அடிப்படையில், ஊரக பகுதியில் கழிப்பறை இல்லாத வீடுகளில் கழிப்பறை கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தென்னிந்தியாவிலேயே அதிக அளவில் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளை உருவாக்கி தமிழகத்தில் பெருமைக்குரிய மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் திகழ்ந்து வருகிறது.
2017-2018-ம் ஆண்டிற்கு திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக மாற்றிட 133 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, அதில் மூன்று ஊராட்சிகள் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக மாற்றப்படடுள்ளன. மேலும் திருவைகுண்டம், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியங்களை ஜுலை 2017-க்குள் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சி ஒன்றியங்களாக மாற்றிட, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பணி முடிவுறும் நிலையில் உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சிகளில் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்றதாக மாற்றப்பட்ட 273 ஊராட்சிகளில் கழிப்பறை பயன்பாடு உறுதிபடுத்திடவும், மீதமுள்ள 130 கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் 40812 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு, ஊராட்சி ஒன்றியங்கள் முழுவதும், முழு சுகாதார ஊராட்சி ஒன்றியமாக மாற்றப்பட்டு, தூத்துக்குடி மாவட்டமே முழு சுகாதார மாவட்டமாக 2017 ஆகஸ்ட் மாதத்திற்குள் மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.