நல்லாண்டார்கொல்லையில் ஓ.என்.ஜி.சி கழிவுத்தொட்டியில் தீ..!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நல்லாண்டார்கொல்லையில் ஆழ்துளை கிணற்றிலிருந்து வெளியேறும் கழிவுகள், சுமார் 150 மீட்டர் தொலைவில் தொட்டி அமைக்கப்பட்டு அதில் கொட்டி வைக்கப்பட்டன. இந்தநிலையில் நேற்று மாலை அந்த கழிவுதொட்டியில் உள்ள கழிவுகளில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் அப்பகுதியில் புகைமண்டலமாக காணப்பட்டது.
தகவலறிந்து கீரமங்கலம் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். அங்கு வந்த ஆலங்குடி டிஎஸ்பி அப்துல் முத்தலிப், கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல் ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டு, `எங்கள் விவசாய நிலத்தை காப்பாற்ற ஆழ்குழாய் கிணற்றை உடனடியாக அகற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.