“நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை” – அடித்துக் கூறும் பொன்.ராதா…
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி, வருகிற 27-ந் தேதி தி.மு.க. நடத்தும் மனித சங்கிலி போராட்டம், மக்களை ஏமாற்றும் போராட்டம் என்றும், நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஜனாதிபதியில் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அமைச்சர்கள் பிரதமரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன், பிளஸ் 2 மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என யோசனை தெரிவித்தார். இதுகுறித்து ஏற்கனவே மத்திய அமைச்சரிடம் பேசி இருப்பதாக கூறினார்.
ஆனால் தமிழக சட்டசபையில் நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை என பொன்னார் தெரிவித்தார்..
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி, வருகிற 27-ந் தேதி தி.மு.க. நடத்தும் மனித சங்கிலி போராட்டம், மக்களை ஏமாற்றும் போராட்டம் என்றும், பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, தரம் உயர்வாக இருந்தது. ஆனால் தற்போது கல்வியில் வளர்ச்சி இல்லை என குற்றம்சாட்டினார்.
நீட் தேர்வு பிரச்சினையில் தி.மு.க.வினர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள் என்றும் ஆனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.