மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதாவுக்கு ஓகே சொன்னது கர்நாடக அமைச்சரவை..!
மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதாவுக்கு கர்நாடக மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அனைத்து தரப்பினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மசோதா, அடுத்து வரவுள்ள மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மனிதத் தன்மையற்ற தீய பழக்க வழக்கங்களை அழித்தொழிக்க இந்த மசோதா பெரிதும் உதவும் என்று கருதப்படுகிறது. நவம்பர் மாதம் நடைபெற உள்ள பேரவைக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என கர்நாடக மாநில சட்ட அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற சித்தராமையா, “மகராஷ்டிராவைப் போல கர்நாடகாவிலும் விரைவில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்படும். இதன் மூலம் காலங்காலமாக சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மாந்தீரிகம், நரபலி உள்ளிட்டவை ஒழிக்கப்படும்” என தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக இந்த மசோதா நிலுவையில் இருந்தது.
இந்நிலையில் முற்போக்கு சிந்தனையாளரான எம்எம் கல்புர்கி கொல்லப்பட்டதை அடுத்து மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதாவை உருவாக்குமாறு கர்நாடக அரசுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து மாநில அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.