கார்த்திக் சிதம்பரம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்…
புதுடில்லி: அன்னிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி தேடப்படும் நபராக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளார். ஐஎன்எக்ஸ் நிறுவனத்திற்கு அன்னிய முதலீடு பெற்று தந்ததில் மோசடி செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்தி மீது புகார் எழுந்தது. இதனையடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து நேரில் ஆஜராகுமாறு அவருக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், விசாரணைக்கு அவர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை . சுற்றறிக்கை: இந்நிலையில், அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகம் கார்த்தியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் வெளிநாடு செல்ல முயன்றால் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. வழக்கு: இதனை எதிர்த்து கார்த்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு வரும் 7 ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.