துருக்கி நிலநடுக்கத்தில் 33 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட 70 வயது முதியவர்!

துருக்கி நிலநடுக்கத்தில் 33 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட 70 வயது முதியவர்.
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துடன், சிறிய அளவிலான சுனாமி பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் இஸ்மியர் நகரமே உருக்குலைந்து காணப்படுகிறது.
இந்த இயற்கை சீற்றத்தால், 400-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிற நிலையில், இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை இந்த இடிபாடுகளில் சிக்கி 62 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்மியர் நகரத்தில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து 33 மணி நேரத்திற்கு பின் 70 வயது முதியவர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இதனால், மீட்பு குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளதோடு, மேலும் நம்பிக்கையுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.