கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடியில் தடுப்பணை கட்டும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
நாகையில் ரூ.100.23 கோடியில் நிறைவேற்றப்பட்ட 43 பணிகள் தொடக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் மனமறிந்து திட்டம் தீட்டுவதில் வல்லவர் ஜெயலலிதா எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை 14 இடங்களில் முதலமைச்சர் தரப்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று நாகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது, பேசிய முதலமைச்சர் நாகையில் ரூ.100.23 கோடியில் நிறைவேற்றப்பட்ட 43 பணிகள் தொடக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் மனமறிந்து திட்டம் தீட்டுவதில் வல்லவர் ஜெயலலிதா எனவும் தெரிவித்தார்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், வேதாரண்யம் அருகே தலைஞாயிறு பகுதியில் மீன்வள பல்கலையின் உறுப்புக் கல்லூரி தொடங்கப்படும் எனவும் பேசினார்.
கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடியில் தடுப்பணை கட்டும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.