லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 30 பேரை காப்பாற்றி ஹீரோவின் நிலைமை இப்படி ஆகிவிட்டதா…?
லாஸ் வேகாஸ்: லாஸ் வேகாஸ் நகரில் துப்பாக்கிச்சூடு நடந்தபோது 30 பேரை காப்பாற்றிய நபர் இனி தன் வாழ்நாள் முழுவதும் கழுத்தில் துப்பாக்கி குண்டுடன் வாழ வேண்டி உள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை நோக்கி ஸ்டீபன் பாடக் என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் 59 பேர் பலியாகினர், 527 பேர் காயம் அடைந்தனர்.
பின்னர் ஸ்டீபன் பாடக் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் ISIS தீவிரவாத இயக்கம் இந்த செயலை தாங்கள் செய்ததாக அவர்களுடைய அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்கள்.ஆனால் இதனை முற்றிலும் மறுத்துள்ளது அமெரிக்காவின் காவல்துறை அதிகாரிகள்…
இது ஒருபுறம் இருக்க கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆரஞ்ச் கவுன்ட்டியை சேர்ந்த ஸ்மித்(30) என்பவர் தனது அண்ணன் லூயிஸ் ரஸ்ட்டின் 43து பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் லாஸ் வேகாஸ் சென்றார்.
அண்ணனுக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் ஸ்மித் தனது குடும்பத்தாருடன் இசை நிகழ்ச்சிக்கு சென்றார். முதலில் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டபோது யாரோ பட்டாசு வெடிப்பதாக ஸ்மித், லூயிஸ் உள்ளிட்டோர் நினைத்துள்ளனர்.
யாரோ துப்பாக்கியால் சுடுகிறார்கள் அனைவரும் ஓடுங்கள் என்று லூயிஸ் அலறியுள்ளார். உடனே ஸ்மித் தனது குடும்பத்தாரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றார்.
ஸ்மித் இசை நிகழ்ச்சிக்கு வந்த 30 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார். சில இளம்பெண்கள் சரியாக மறைந்திருக்காததை பார்த்த ஸ்மித் அவர்களை காப்பாற்ற சென்றபோது அவரது கழுத்தில் குண்டு பாய்ந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்மித் தற்போது நலமாக உள்ளார். ஆனால் அவரது கழுத்தில் இருந்து குண்டை அகற்ற முடியவில்லை. வாழ்நாள் முழுவதும் அந்த குண்டுடன் தான் அவர் வாழ வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.