தமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு மேல் நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளது
சென்னை: தமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு மேல் நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளது. இந்தமுறை எடப்பாடி பழனிச்சாமி அரசு தப்புமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
சட்டசபையில் பத்து சதவிகித எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால்தான் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியும். இந்த ஆட்சியைக் கலைப்பதற்கு தி.மு.க தயாராக இருக்கிறது.
இதற்கான சூழலுக்காகத்தான் இவ்வளவு நாள் ஸ்டாலின் காத்திருந்தார். இப்போது எடப்பாடி-தினகரன் சண்டை அதற்கான வாய்ப்பைக் கொடுத்துவிட்டதாகக் கருதுகிறார். திமுக உடன் நாங்கள் கை கோர்த்தால் ஆட்சி கவிழும்’ என தினகரன் தரப்பு எச்சரிக்கையாகவே கூறிவிட்டது.
இதற்குப் பதில் கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி தரப்போ, உங்கள் குடும்பத்துக்கு எதிராக எதையும் செய்யாமல் அமைதியாக இருந்ததால்தான், என்னுடைய செல்வாக்கு பெரியளவில் உயரவில்லை.
அமைதியாக இருக்கலாம் என நினைத்தால் நீங்கள் விடப் போவதில்லை. ஆட்சிக்கு எதிராக சிறு துரும்பைக் கிள்ளிப் போட்டாலும், கைது நடவடிக்கையைத் தடுக்க முடியாது. உங்கள் குடும்பத்தை வலுவாக எதிர்த்தால்தான் என்னால் வளர முடியும். அதற்கான சூழலை நீங்களே உருவாக்கிக் கொடுக்கிறீர்கள்.
இனி நீங்களா? நானா எனப் பார்த்துவிடுவோம்’ எனக் கண்டிப்புடன் கூறிவிட்டனர். சட்டசபைக் கூட்டத் தொடரில், திமுக உடன் தினகரன் கை கோர்ப்பாரா என்பதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது கொங்கு டீம்.