‘2022 தொடங்கிவிட்டது’ – சமுதாய ரீதியாக கணக்கெடுத்து தொகுதி ஒதுக்கீடு செய்திடுக – உயர்நீதிமன்ற மதுரை கிளை
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மக்கள் தொகை கணக்கெடுப்பு சமுதாய ரீதியாக எடுக்கப்பட்டு, அதனடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியை சேர்ந்த காமராஜ் என்ற சின்னதுரை மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் மூன்று லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தற்போது மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் நகராட்சியாக மாற்றப்பட்டது. மானாமதுரை நகராட்சியில் பட்டியலின மக்கள் 5,760 பேர் உள்ளனர். ஆனால், மானாமதுரை நகராட்சி சேர்மன் பதவிபட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அப்பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட சமுதாயத்திற்கு விதிகளின்படி, இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், 2022-ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது. தொழில்நுட்பமும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துவிட்டது. மக்கள் அனைவரிடமும் ஆதார் கார்டு உள்ளது. ஆகவே, மக்கள் தொகை கணக்கெடுப்பு சமுதாய ரீதியாக எடுக்கப்பட்டு, அதனடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்து, இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் விரிவான பதில்மனு தாக்கல் செய்யவேண்டும் என கூறி, வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.