183 ரன்களுக்கு இலங்கை ஆல்-அவுட்…., அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்…!
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 439 ரன்கள் பின்தங்கியுள்ளது இலங்கை அணி.
இந்தியா -இலங்கை அணிகள் இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. 3 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்களுடன் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தைத் நேற்று தொடர்ந்தது. இதையடுத்து இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 133 ரன்களும், ரஹானே, 132 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்து தடுமாறியது.
இதையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இலங்கை அணி உணவு இடைவேளைக்கு முன்பே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 439 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இலங்கை அணியில் அதிகபட்சமாக நிரோஷன் டிக்வெல்லா 51 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் 69 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளர். ஷமி, ஜடெஜா தலா 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
தற்போது பாலோ-ஆன் ஆன இலங்கை அணி தற்போது 51/1 நிலையில் தோல்வியில் இருந்து தப்பிக்க போராடி வருகிறது.களத்தில் கருனாத்திரே 33 ரன்களுடன்,குசால் மென்டிஸ் 22 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.ஏற்கனவே முதல் டெஸ்டில் வெற்றி பெற்று 1-0 என்று இந்திய அணி முன்னிலையில் உள்ளதால் இரண்டாவது டெஸ்டிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது