சிறுமியிடம் சேட்டை செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை
சென்னை: அயனாவரம் பகுதியைச் சேந்த தம்பதியினர் குமார், மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு 2 குழந்தைகள். முதல் குழந்தை மீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தாள். இவர்கள் தங்கியுள்ள அதே கட்டிடத்தில் மற்றொரு குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் குழந்தை உள்ளது. கீதாவும், மீராவும் தோழிகள். இந்நிலையில், கீதா வீட்டிற்கு அடிக்கடி அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (55) வந்து செல்வார். கடந்த 2016ல் காணும் பொங்கல் அன்று மீராவும், கீதாவும் மொட்டை மாடியில் விளையாடி உள்ளனர். அங்கு வந்த முருகன், கீதாவை சாக்லெட் வாங்கி வரும்படி ரூ.10 கொடுத்து அனுப்பியுள்ளார். பின்னர் மீராவிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுபற்றி தாயிடம் மீரா கூறியுள்ளார்.
இதுகுறித்து, அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் தாய் புகார் அளித்தார். போலீசார் முருகன் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதுெதாடர்பான வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி கோமதிநாயகம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இவர் யார் என்று தெரியுமா என மீராவிடம் கேட்டபோது, குற்றவாளியை பார்த்து மீரா பயந்துள்ளார். இவரை கொல்ல வேண்டும் என கூறியுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் நீதிபதி, குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் போஸ்கோ சட்டத்தின் கீழ் மீராவுக்கு அரசு ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.