முகாபே பதவி விலகல் – ஜிம்பாவேயில் அடுத்தது என்ன?
93 வயது ரொபேர்ட் முகாபே சிம்பாப்வே அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அவர் தனது வாரிசு யார் என்பதை கூறவில்லை. இருப்பினும் 75 வயது எமர்சன் மனாங்கக்வா அடுத்த அதிபராக பதவியேற்கலாம் என்பது உறுதியாகத் தெரிகின்றது.
இருப்பினும் இனி வருங்காலத்தில் ஜனநாயக ஆட்சி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை! ஏற்கனவே மனாங்கக்வா கையில் இரத்தக்கறை படிந்துள்ளது. முன்பு நடந்த பல படுகொலைகளுக்கு காரணமாக இருந்தவர். அவருக்கு “முதலை” என்ற பட்டப் பெயரும் உண்டு.
சிம்பாப்வேயில் நடந்த அரசியல் மாற்றத்தை பிரிட்டிஷ் பிரதமர் தெரெசா மே வரவேற்றுள்ளார். “பிரிட்டனின் பழைய கூட்டாளியான” சிம்பாப்வேயுடன் உறவுகள் புதுப்பிக்கப் படும் என்று தெரிவித்துள்ளார்.
புதிய அதிபர் மனாங்கக்வா, உலக வங்கி, IMF உடனான உறவுகளைப் புதிப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இதுவரை காலமும் அவை சிம்பாப்வேக்கு கடன் கொடுக்க மறுத்து வந்துள்ளன.
2000ம் ஆண்டு வெள்ளையின விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை காரணமாக, சர்வதேச சமூகத்தால் ஒதுக்கப் பட்டு, பொருளாதாரத் தடை விதிக்கப் பட்டது. அந்த வருடம் மட்டும், சுமார் 4000 வெள்ளயின விவசாயிகள் நாட்டை விட்டு விரட்டியடிக்கப் பட்டனர்.
அவர்களது சொத்துக்களை பறித்ததுடன், நஷ்டஈடும் கொடுக்கவில்லை. சிலநேரம், புதிய அதிபர் மனாங்கக்வா வெள்ளையரின் சொத்துக்களை மீள ஒப்படைக்கலாம். அவ்வாறு செய்தால், மேற்குலக தொடர்புகள் புதிப்பிக்கப் படும்.
இருப்பினும் கறுப்பினத்தவரின் அதிருப்திக்கு ஆளாகலாம். அதை சமாளிப்பதற்கு இராணுவ சர்வாதிகார ஆட்சி நடத்த வேண்டி இருக்கும். ஆகவே குறுகிய காலத்தில் ஜனநாயகம் திரும்பும் என்று எதிர்பார்க்க முடியாது. இதிலே வேடிக்கை என்னவென்றால், சுதந்திரத்தின் பின்னர், எண்பதுகளில் முகாபே பிரதமராக இருந்த காலத்திலும் நிலைமை இப்படித் தானிருந்தது.
முகாபே தமது பொம்மையாக இருப்பார் என்ற நம்பிக்கையில் தான் பிரிட்டன் சிம்பாப்வேக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்க முன்வந்தது. அதற்கு முன்னர், நீண்ட காலம், தென்னாபிரிக்காவில் இருந்த மாதிரி, வெள்ளையின சிறுபான்மையினரின் பாஸிச ஆட்சி நடந்தது. அப்போது அதன் பெயர் ரொடீசியா. சிசில் ரோட்ஸ் என்ற காலனிய ஆக்கிரமிப்பாளரின் பெயரால் அழைக்கப் பட்டது.