ஆர்கே நகர் : விஷால், தீபா மனுக்கள் நிராகரிப்பு : பரபரப்பான நிமிடங்கள்

Default Image

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. பரிசீலனை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கப்பட்டது. இந்த பரிசீலனை  தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது.

அப்போது மதியம் 2.15 மணியளவில் நடிகர் விஷாலின் வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது சுயேச்சை வேட்பாளர்கள் தினேஷ், பிரேம்குமார் ஆகியோர் எழுந்து, ‘விஷால் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகள் போலியாக போடப்பட்டு இருப்பதாகவும், அவர் மீது உள்ள வழக்கு தொடர்பான விவரத்தை குறிப்பிடவில்லை என்றும், வங்கி கணக்கு தொடர்பான விவரங்கள் சரியாக குறிப்பிடவில்லை என்றும் குற்றம் சாட்டினர். எனவே, விஷாலின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்’ என்று கூச்சலிட்டனர்.

இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி விஷாலின் வேட்புமனுவின் மீதான ஆய்வு நிறுத்தி வைக்கபட்டதாக அறிவித்தார். பிற்பகல் 2.30 மணி நேர நிலவரப்படி, 72 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டதாகவும், அதில் அ.தி.மு.க. வேட்பாளர் மது சூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரின் மனுக்கள் உள்பட 42 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 29 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், விஷால் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

பிறகு உணவு இடைவேளை முடித்து, பிற்பகல் 3.30 மணியளவில் மீண்டும் வேட்புமனு பரிசீலனை தொடங்கியது. அப்போது எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபாவின் மனு பரிசீலனைக்கு வந்தது.

அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல்கள், ‘ஜெ.தீபா தாக்கல் செய்த வேட்பு மனுவில் பிரமாண வாக்குமூலம் பிரிவில் தகவல்களை பூர்த்தி செய்யவில்லை என்றும், மனுவில் பல்வேறு பிரிவுகளில் தகவல்களை பதிவு செய்யவில்லை என்றும் அவருடைய மனுவை நிராகரிக்க வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவருடைய மனுவை ஆய்வு செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி, ஜெ.தீபாவின் மனுவையும் நிராகரித்தார்.

அதைத்தொடந்து மாலை 5.20 மணியளவில் நடிகர் விஷாலின் மனு மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அவருடைய மனுவில் முன்மொழிந்ததாக கூறப்பட்ட 10 பேரில் சுமதி, தீபன், கார்த்திக்கேயன் ஆகிய 3 பேரும் தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்கு வந்தனர்.

தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியிடம், ‘மனுவில் எங்கள் பெயர் போலியாக குறிப்பிடப்பட்டு, கையெழுத்து போடப்பட்டு இருக்கிறது என்றும், நாங்கள் மனம் உவந்து முன்மொழியவில்லை’ என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து நடிகர் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர். மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, போராட்டத்தை முடித்துக்கொண்டு தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்கு மீண்டும் நடிகர் விஷால் சென்று, தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறினார்.

தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியிடம், விஷால் தன்னிடம் இருந்த ஆடியோ ஆதாரங்களையும், மேலும் சில வாட்ஸ் அப் ஆதாரங்களையும் தாக்கல் செய்தார். அவர் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, தனது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக விஷால் அறிவித்தார்.

ஆனால் நேற்று இரவு 11 மணி அளவில் விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. முன்மொழிவோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.

ஆர்கே நகரில் மொத்தம் 145 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் 72 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் மேலும் 73 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்